கோவையில், பட்டுநூல்க்காரர் தெருவில், அதிகாலை பல் தேய்ப்பதற்கு முன்னே பால் கரந்து, பத்து மைல் தள்ளி இருந்த அரசு பள்ளிக்கூடம் வரை நடந்து சென்று தமிழ் மீடியத்தில் பாடம் கற்றவர்கள் எனது வீட்டார். இன்று நான் தானியங்கி பல் துலக்கியால் பல் தேய்த்து, பரவசமாக பாடல் கேட்டுக்கொண்டே எனது சொகுசு வண்டியில் பணிக்குச் சென்று, அங்கே அமெரிக்க ஆங்கிலத்தில் அனாயாசமாக பேசுகின்றேன் என்றால் அதில் அவர்களது பங்கே அதிகம். அவர்களுடன் கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் இதை மறுத்தலாகாது. ஒன்றரை வருடங்கள் முன்பு இதை அறிந்திருந்த போதும் நான் உணர்ந்த பாடில்லை. எனக்கு அதை உணர்த்தியது விழுப்புரம் சின்னையாபிள்ளை கணேசன் என்ற மாநடிகன்.
சிறு வயதில் எனது வீட்டில் பயங்கர கெடுபிடி, சினிமா விஷயத்தில். காரணம் இல்லாமல் இல்லை. சரித்திரப் பாட புத்தகத்தில் விகடனும், குமுதமும் மறைத்து சினிமா துணுக்கும், சிறுகதையும் படித்தவன் தான் நான். இரு இடங்களில் மட்டும் கெடுபிடி தளரும். ஒன்று இசை. எங்கள் வீட்டில் அனைவரும் மெல்லிசை மன்னர்களின் இசைக்கும், கண்ணதாசனின் தமிழுக்கும், சௌந்தரராஜன் மற்றும் ஸ்ரீனிவாசின் கந்தர்வ குரல்களுக்கும் அடிமை. மற்றொன்று காவியப்படங்கள். குறிப்பாக சிவாஜி கணேசன் நடித்த காவியப்படங்களுக்கு தடை தளர்த்தப் படும். கர்ணன் படத்தின் ஓடி ஓடித் தேய்ந்துப் போன பதிவு ஒன்று தான் சிவாஜியுடனான எனது முதல் அறிமுகம். ஆங்கிலத்தில் சொல்வது போல் அதை விட நல்ல அறிமுகம் கிடைத்தல் அரிது. மகாபாரதத்தின் முழுக் கதையையும் அறிந்திருந்த போதிலும், இறுதியில் கணேசன் என் கண்ணில் நீரை வரவழைத்துவிட்டார். அதற்க்குப் பின் அதிகம் முறை பார்த்த படம் திருவிளையாடல்.
எனது பதிமூன்றாவது (சும்மாவா அதை ராசியில்லாத எண் என்கிறார்கள்?) வயதில் கணேசனும் நானும் பாதைகள் பிரிந்தோம். பன்னிரண்டு வருடங்களுக்கு அதிக பேச்சு வார்த்தை இல்லை. அதனால் இழப்பு முழுவதும் எனக்கே என்று நான் உணரவும் இல்லை. எனது இருபத்தி ஐந்தாவது வயதில் நான் மனதளவில் முழுமையான அமெரிக்க-வாசி ஆகிவிட்டேன், காலையில் சவரம் செய்யும் பொழுது கண்ணாடியில் ஒரு இந்தியனை பார்த்து திடுக்கிடும் அளவுக்கு. வீட்டாருடன் நடக்கும் தொலைப்பேசி உரையாடல்கள் பொதுவாக சண்டையில் சென்று முடிந்தன. கணேசனுக்கு யாரோ சொல்லி இருக்க வேண்டும். தற்செயலாக மீண்டும் சந்தித்த பொழுது, அவர் பெரிய தேவர், நான் சக்தி. "ஏய் சக்தி, நான் தேய்ந்" - அசரீரீ போல் ஒரு குரல். "அந்த காட்டு மிராண்டிக் கூட்டத்திலே ங்கோப்பனும் ஒருத்தன் தேய்ந்னு மறந்துடாதே" - எனக்கு ஐந்து வயது இருக்கும்போது மறைந்து போன எனது தந்தையின் உருவம் கொண்டார். "வாழுறது முக்கியம்தேன் இல்லேன்னு சொல்லலே. ஆனா மத்தவங்களுக்கு பயனுள்ள வாழ்க்கையா வாழ்ந்துட்டு செத்து போறது தான் அந்த சாவுக்கே பெருமெ. வெதை வெதைச்சொடனே பழம் சாப்பிடணும்னு நெனைக்க முடியோமா? இன்னைக்கு நான் வெதைக்குறேன், நாளைக்கு நீ பழம் சாப்பிடுவே, அப்பறோம் உன் மகன் சாப்பிடுவான், அதுக்கு அப்பறோம் அவன் மகன் சாப்பிடுவான். இதெல்லாம் என்ன பெருமையா? கடமை, ஒவ்வொருத்தனோட கடமை" - கணவன் இழந்த எனது தாயையும், தகப்பன் இழந்த என்னையும் தாங்கிய எனது மாமாவின் உருவம் கொண்டார். முன்கோபத்துடன் சட்டையை பிடித்து பிறகு கைவிட்ட போது சுள்ளென்று சீற்றம் கொள்ளும் எனது தாயை நினைவூட்டினார். கர்ணனைப் போலவே பெரிய தேவரும் கண்ணீர் துளி பெருக்கினார்.
இந்தக் காட்சி சிவாஜியைத் தவிர எவர் நடித்தாலும், சிறப்பாக அமைவது கடினம். என் சிந்தையை ஆட்கொள்வது அதை விடக் கடினம். எனது பெற்றோரையும் அவரது ஏக்கங்களையும் எனக்குப் புரிய வைத்து, அவர்களை எனக்குத் திருப்பித் தந்ததில் ஒரு பங்கு சிவாஜியைச் சேரும். மேற்கூறிய விஷயங்கள் எதுவும் நான் முன்பே அறிந்திராதவை அல்ல, உணர்ந்திராதவை மட்டுமே. என் அறிவிற்கும் உணர்விற்கும் பாலம் கட்டிய ஆசானாகிய கணேசனின் எண்பதாவது பிறந்த நாள் அன்று என் மனமார்ந்த நன்றியை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
Freeze Frame #143: Baasha
57 minutes ago
0 comments:
Post a Comment